இயற்கை மணம் கமழ்ந்த பொங்கல் விழா .................. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சு நடத்திய பொங்...
இயற்கை மணம் கமழ்ந்த பொங்கல் விழா
..................
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சு நடத்திய பொங்கல் விழா 17. 01. 2025 மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலய முன்றலில் இடம் பெற்றது
முருகமூர்த்தி கோவில் - அருகில் சிவன் கோவில் - ஓங்கி வளர்ந்த மரங்களின் சோலை - முற்றிக் கதிர் தள்ளிய வயல்வெளி என இயற்கையின் கொடையை அனுபவித்து மகிழ்ந்தேன்.
வேலுப்பிள்ளை கடைச் சந்தியிலிருந்து கோவில் போகும் வரை எந்த தடுமாற்றமும் இன்றி கோவிலடியை அடையக்கூடிய கூடிய வகையில் ஒழுங்கை நெடுகலும் அம்புக்குறி வைத்தும் நந்தி கொடி கட்டியும் ஆற்றுப்படுத்தி இருந்தனர்
பண்பாட்டு அலகின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் விழாவில் 'முகம் காட்டுவது ' என்று நினைத்துச் சென்ற எனக்கு அங்கு பிரமிப்பு காத்திருந்தது. இயற்கை சூழலும் விழா ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன.
பாரம்பரிய முறைப்படி புதிதெடுத்தல் பூசை - விருந்தினர்கள் புதிதெடுத்தல் - 57 பானைகளில் பொங்கல் - உரலில் நெல் குற்றி பொங்கல் செய்தல் என மனதுக்கு மகிழ்வு தரும் காட்சிகள்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் , கிராம அலுவலர்கள் இணைந்து விழாவிற்கு பெருமளவு மக்களை திரட்டி இருந்தனர். பொங்கல் செய்ய வந்த 57 பானைகளுக்குரிய செலவையும் பொங்கியவர்களே ஏற்றிருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
கிடுகு பின்னுதல் பெண்களுக்கான தேங்காய் துருவுதல் (?), கிளித்தட்டு , பலூன் உடைத்தல் என பல்வேறு கிராமிய விளையாட்டுகள் ஒருபுறம் இடம்பெற்றன.
கோலாட்டம் கும்மி வசந்தன் சிலம்பம் கிராமிய இசை என பல்வேறு கிராமிய நிகழ்வுகள் மேடையில் இடம் பெற்றன.
மொத்தத்தில் நன்கு திட்டமிடப்பட்டு சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்ட விழா.
இதற்காக உழைத்த அத்தனை பேரும் தமது உயர்ந்த பட்ச உழைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மனமுவந்த வாழ்த்துகள்
படங்கள் நன்றி திரு ஜெயதாஸ் C.O. santhiramouleesan.laleesan--
Governor's Office Northern Province
எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவையானதே. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பொங்கல் விழா மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை (17.01.2025) இடம்பெற்றது.
விருந்தினர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் பாரம்பரிய முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டு சடங்காசார முறைப்படி புதிதெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதை ஆலயத்துக்கு எடுத்து வந்து, நெல்லை உரலிலிட்டு அதனை அரிசியாக்கி பொங்கல் பொங்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பாக 51 பானைகளில் பொங்கல்கள் பொங்கப்பட்டன. இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இசைக் கருவிகள் கலைமன்றங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
வடக்கு மாகாண ஆளுநர் தனது பிரதமர் விருந்தினர் உரையில், 1996ஆம் ஆண்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலராகப் பணியாற்றியமையும் அதன்போது இந்தப் பகுதிகளுக்கு வரமுடியாத நிலைமை இருந்தமையையும் சுட்டிக்காட்டினார். 28 ஆண்டுகளின் பின்னர் இங்கு வந்து பாரம்பரிய முறையில் இடம்பெறும் பொங்கல் நிகழ்வில் பங்கேற்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். அதேவேளை பொங்கல் நிகழ்வுக்காக வயலும், கோயிலும் சூழ்ந்த அமைதியான இடத்தை தெரிவு செய்து நிகழ்வை ஒழுங்கமைத்த அனைவரையும் ஆளுநர் பாராட்டினார்.
விவசாயிகளுக்கு இன்று காலநிலை மாற்றம் சவாலாகி வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், விவசாயிகளின் முயற்சி ஒருபோதும் வீணாகாது என்றும் அவர்களுக்கு அதற்குரிய பலன் நிச்சயம் கிடைத்தேதீரும் எனவும் தெரிவித்தார்.
விவசாயத்தை வருமானம் அதிகம் தரக்கூடிய துறையாக மாற்றவேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இன்றைய இளையோருக்கு விவசாயத்தின் மீதான நாட்டம் குறைந்து வருவதாகத் தெரிவித்தார். அரசாங்க வேலையே வேண்டும் என இளையோர் கோரி நிற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை குறைவான வேலை என அதை அவர்கள் தெரிவு செய்கின்றார்களோ தெரியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
தாம் நிர்வாக சேவைக்கு நுழைந்த காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகளோ ஏனைய வசதிகளோ இல்லை என்றும் மிகக் கஷ;டமான காலத்திலும் மனநிறைவான, சந்தோசமான பணியையாற்றியதாகவும் குறிப்பிட்ட ஆளுநர் இன்று பல வகையான வசதிகள் இருந்தும் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கவில்லை எனவும் வேதனை வெளியிட்டார்.
அரசாங்க வேலை கிடைத்தவுடன் தமது வீட்டுக்குப் பக்கத்தில் பணியிடம் கேட்கும் போக்கே இன்று அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர் அந்த நிலைமையில் மாற்றம் தேவை எனச் சுட்டிக்காட்டினார். குடும்பம் முக்கியமானது எனத் தெரிவித்த ஆளுநர், அரச பணியைப் பெற்றுக்கொண்டால் அதையும் சிறப்பாக செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டார். நல்லது செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கும் எனத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தின் முன்னேற்றத்துக்கும் செழிப்புக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றவும் அழைப்பு விடுத்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகனும் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
17.01.2025